பாடம் 3 ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா?

பாடம் 3 : ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா?



     கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே மீண்டுமாக இந்த வேத வகுப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் கடந்த பாடத்தில் வானத்திலேயும் பூமியிலேயும் யார் யாரெல்லாம் தேவர்கள் என்பதைப்பற்றியும், தேவனுடைய குமாரனாகிய இயேசுவை வேதம் அநேக இடங்களில் தேவன் என்று ஏன் சொல்லுகிறது என்பதைப்பற்றியும் பார்த்தோம், இப்பொழுது நாம் இயேசுவுக்கும் மேலான ஒரு தேவன் உண்டு என்பதைபற்றி பார்க்கப்போகிறோம். நாம் கடந்த பாடத்தை நினைவு கூறுவோம். அதில் இயேசுவானவரோ அல்லது தூதனோ அல்லது மோசேயோ எவர்களும் தங்களுடைய சுய வார்த்தைகளை நமக்கு போதிக்கவில்லை இவர்களுக்கு போதித்தவர் எவைகளை சொன்னாரோ அவைகளைத்தான் போதித்தார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. உதாரணமாக இயேசுவானவர் சொல்லுகையில்

யோவான் 12:49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

யோவான் 12:50. அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

யோவான் 14:24. என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

யோவான் 14:10 நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

யோவான் 17:8. (இயேசு பிதாவை நோக்கி) நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

யோவான் 6:28. ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

ஆக மேற்கண்ட வசனங்களில் இயேசுவானவர் தாம் போதித்த அத்தனை வசனங்களும் தன்னுடையதல்ல என்றும் இவைகள் அனைத்தும் தன்னை அனுப்பின பிதாவினுடையது என்றும் கூறுகின்றார். மேலும்
பழைய ஏற்பாட்டில் இயேசுவைப்பற்றி பிதாவானவர் சொன்னதை கவனியுங்கள்.

உபாகமம் 18:18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

உபாகமம் 18:19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

ஆக சர்வத்திற்க்கும் மேலான தேவனாகிய இயேசுவானவரே தன்னுடைய சுயத்தின்படி ஒன்றும் போதிக்கவில்லை அவைகளைப் போதித்தவர் இன்னொருவர் இருப்பதினாலே இயேசுவுக்கும் மேலான தேவன் ஒருவர் உண்டு என்பதை நாம் புரிந்து கொண்டோம். அவரைப்பற்றி இன்னும் சற்று தெளிவாய் காண்போம்,

உங்கள் கேள்வி : அப்படியானால் நமக்கு மூன்று தேவனா?

பதில் : இல்லை பிதாவாகிய ஒரே  தேவன் மட்டுமே அவருக்கு கீழாகத்தான் எல்லாமே , இயேசுவும் அவருடைய வார்த்தைக்கு கட்டுபட்டு நடக்கக்கூடியவரே. 

யோவான்  5: 30. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான்  8: 42. இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

யோவான்  12: 49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

1 கொரிந்தியர் 15: 27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

பரிசுத்த ஆவியானவரும் இயேசுவைப்போல்  பிதாவுக்கு எப்பொழுதும் கீழ்பட்டிருப்பார்.

யோவான்  16: 13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

மேற்கண்ட வசனத்தில் இயேசுவானவரும் சரி பரிசுத்த ஆவியானவரும் சரி தேவனுடைய கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்படிகிறார்கள் தேவனால் அனுப்பபடுகிறார்கள் மற்றும் தேவன் சொன்னதையே பேசுகிறார்கள்,   என்பதை பார்க்கிறோம். தூதர்களுக்கும் அப்படித்தான் நாமும் அப்படித்தான் பிதாவாகிய தேவனுடைய  வார்தைகளுக்கு செவி கொடுத்தால் மாத்திரமே நாம் பரலோகத்திற்கு செல்லமுடியும் .

மத்தேயு 7 : 21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. .

மேலும் இவர்கள் மூவரைப்பற்றிய சத்தியத்தை நாம் கடைசி பாடத்தில் தெளிவாய் காணுவோம். இப்பொழுது வேதத்தில் ஒரே தேவன் நமக்கு இருக்கிறாரா? அல்லது மூன்று தேவன் நமக்கு உண்டா? என்பதைப்பற்றி பார்ப்போம்.

முதலாவது வேதத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தும் சாட்சியை பாருங்கள்

மல்கியா 2:10 நம்மெல்லாருக்கும்  ஒரே  பிதா இல்லையோ?  ஒரே  தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்?

சங்கீதம் 86:10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

மேற்கண்ட வசனத்தில் தீர்க்கதரிசிகள் இயேசுவானவரைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் அநேகம் உரைத்திருந்தாலும் மற்றும் இயேசுவும் தேவனாக இருக்கிறார் என்றும் உரைத்திருந்தாலும்

( உதாரணம் சங்கீதம் 45 : 6 ல் தாவீது இயேசுவை தேவனே என்று அழைத்திருப்பார் மற்றும் ஏசாயா 9:6 ல் ஏசாயாவும் இயேசு வல்லமையுள்ள தேவன் என்று உரைத்திருப்பார்.)

பிதாவாகிய தேவன் ஒருவரே தேவன் என்று கூறுகிறார்கள்.
இரண்டாவது அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தும் வசனத்தை பாருங்கள்,

I கொரிந்தியர் 8:6  பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும்  ஒரே  கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

எபேசியர் 4:6 எல்லாருக்கும்  ஒரே  தேவனும்  பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

I தீமோத்தேயு 2:5  தேவன்  ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

I கொரிந்தியர் 12:6  கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

I கொரிந்தியர் 8:4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும்  ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

மேற்கண்ட வசனங்களில் அப்போஸ்தலர்கள் இயேசுவைப்பற்றிய அத்தனை சத்தியங்களையும் அறிந்திருந்தாலும் பிதாவாகிய தேவன் என்னும் ஒரே தேவன் நமக்கு உண்டு என்று போதிக்கிறார்கள். ஏன் அவர்கள் இயேசு என்னும் இன்னொரு தேவன் உண்டு என்பதை அறியவில்லையா? 1 தீமோத்தேயு 3 :16, தீத்து 2:13, 1யோவான் 5:20, அப்போஸ்தலர் 20:18, யோவான் 20:29 ஆகிய வசனங்களில் இயேசுவும் தேவன் என்று இவர்கள்தானே கூறினார்கள் அப்படியிருக்க ஏன்  பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு என்று போதிக்கிறார்கள். காரணம் பிதாவாகிய ஒரே தேவனே எல்லாருக்கும் தேவன் அவர் இயேசுவுக்கும் தேவன் என்பதை அறிந்ததினாலேயே இப்படி சொன்னார்கள். இயேசுதான் பிதாவாக இருந்தால் அப்போஸ்தலர்கள் சொல்லியிருப்பார்களே அப்படி இல்லை என்றால் இயேசுவானவரும் சொல்லி இருப்பாரே ஆனால் அவர்கள் அப்படி போதிக்கவில்லை. பிதாவை பற்றி இயேசுவானவர் கொடுக்கும் சாட்சிகளைப்பார்போம்

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

மாற்கு 12: 29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

மேற்கண்ட வசனத்தின் மூலம் இயேசுவானவர் பிதாவை குறித்து சொல்லும் சாட்சியை கவனியுங்கள், அதில் ஒன்றான மெய் தேவனாகிய உம்மை என்று பிதாவாகிய தேவனைப்பார்த்து கூறுகின்றார். மேலும் மாற்க்குவில் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று பிதாவை குறித்து சொல்லும்போது, “நம்முடையஎன்ற வார்த்தையினாலே இயேசுவுக்கும் பிதாதான் தேவன் என்பதை இயேசுவே தெளிவாய் போதிக்கிறார். மேலும் இந்த காரியத்தை இயேசு சொன்ன போது அதைகேட்ட வேதபாரகன் சொன்ன பதிலைப் பாருங்கள். 

மாற்கு 12: 32. அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.

இப்படி பதில் சொன்னவுட்னே இயேசுவின் பாராட்டை பாருங்கள்.

மாற்கு 12: 34. அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.

இந்த காரியத்தை இயேசு திரித்துவ கொள்கையினரிடம் சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும். அதாவது 
இயேசுவை நோக்கி: தவறு போதகரே ஒரே தேவன் உண்டு அவர் நீர்தான் உமையன்றி வேறு தேவன் இல்லை என்று சொல்லி இருப்பார்கள். அதற்கு இயேசுவின் வார்த்தை என்னவாக இருந்திருக்கும் என்பதை பாருங்கள்.
இயேசு திரித்துவ கொள்கையினரை நோக்கி: மூடத்தனமாய் உத்தரவு சொல்லும் நீங்கள் யார் ? நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்க்கு தகுதி இல்லாதவர்கள் என்றுதான் கூறியிருப்பார். காரணம் இயேசுவுக்கும் மேலான பிதாவாகிய தேவன் உண்டு. ஆகவே இரண்டு பேருக்கும் ஒரே பதிலை கூற இயலாது. கூறினால் சத்தியம் கெட்டுப்போம். 

மேலும் அவர் உயிர்தெழுந்த பின்பு மரியாளோடும் மற்றும் சில சகோதரிகளோடும் பேசும் வார்தைகளை கவனியுங்கள்

யோவான் 20: 17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

மேற்கண்ட வசனத்தில் மூலம் என் பிதாதான் உங்கள் பிதா என் தேவன்தான் உங்கள் தேவன் என்று இயேசுவுக்கும் ஒரு தேவன் உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறார். அதுமட்டுமல்ல ஆழமாய் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு சத்தியத்தை பாருங்கள்,

மத்தேயு 23: 8. நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.

9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

10. நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

மேற்கண்ட வசனத்தின் மூலம் இயேசுவானவர் நான் ஒருவரே உங்களுக்கு போதகர் என்றும் நான் ஒருவரே உங்களுக்கு குரு என்றும் நீங்கள் அந்த தகுதிக்கு பாத்திரறல்ல என்றும் அப்போஸ்தலர்களுக்கு போதித்த இயேசுவானவர் பிதா என்னும் அழைப்பை மட்டும் தனக்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லாமல் பரலோகத்தில் இருக்கும் பிதாவே உங்கள் பிதா என்று சொல்லுகிறார். இயேசுதான் பிதாவாய் இருந்தால் அதையும் தனக்குதான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருப்பாரே. ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை காரணம் பிதா என்ற தகுதி தேவன் ஒருவருக்கே சொந்தமானது என்று அவருக்கு தெரியும். ஆனால் ஒரு சில பேர் இந்த சாட்சியை ஏற்காமல் இயேசுவே எங்கள் பிதா என்று சொல்லி அவரை துக்கப்படுத்துகிறார்கள். ஆனால் அப்போஸ்தலர்களோ இப்படி போதிக்கிறதில்லை 

1 பேதுரு 1: 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

கொலோசெயர் 1: 5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

எபேசியர் 1: 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

எபேசியர் 1: 17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

2 கொரிந்தியர் 1: 3. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 11: 31. என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.



மேற்கண்ட வசனத்தின் அப்போஸ்தலர்கள் பிதாவாகிய தேவனை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதா என்று தெளிவாய் அடையாளப்படுத்துகிறார்கள். இயேசுதான் அந்த மகிமைபிதாவாய் இருந்தால் ஏன் அவர்கள் இப்படி சொல்லவேண்டும் நம்முடைய பிதாவாகிய இயேசு என்றுதானே சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படி சொல்லவில்லை காரணம் இயேசுவுக்கும் மேலான பிதா ஒருவர் உண்டு என்பதை நாம் விளங்கிக்கொள்ளவே இப்படி சொன்னார்கள். மேலும்,

கொலோசேயர் 3: 17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகியஇயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

ரோமர் 1: 8. உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

ரோமர் 7:25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

ரோமர் 16:27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய்என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

I பேதுரு 2:5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்இயேசுகிறிஸ்து மூலமாய்தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

எபிரெயர் 13: 15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

எபேசியர் 5: 20. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

I பேதுரு 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

மேற்கண்ட வசனங்களில் அப்போஸ்தலர்கள் ஸ்தோத்திரங்களை இயேசுவின் மூலமாய் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துகிறதை பார்க்கிறோம். இயேசுதான் பிதாவாயிருந்தால் இவர்கள் இயேசுவுக்கே அந்த ஸ்தோத்திரங்களை செலுத்தலாமே. ஆனால் அப்படி செய்யவில்லை, காரணம் இயேசுவுக்கும் மேலான ஒரு பிதா உண்டு அவரே அனைத்து நன்மைகளையும் அளிக்கிறவர் தன்னுடைய குமாரனாகிய இயேசுவையும் அவரே நமக்கு அளித்தார்.

ரோமர்8:32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

அப்போஸ்தலர் 17:28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்;

யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

சொல்லப்போனால்

  • அனைத்தையும் இயேசுவின் மூலமாய் உண்டாக்கியது பிதாவாகிய தேவன், (எபிரெயர் 1:2)
  • அனைத்தையும் பரமாரிக்கிறவர் அவரே (யோபு 38-41அதி)
  • அவரே இயற்கைகளை கட்டுபடுத்துகிறவர் (யோபு 38-41அதி)
  • அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனை கொடுக்கிறவர் அவரே (யோபு 12:10)
  • மனிதர்களை காப்பாற்ற தம்முடைய குமாரனை பூமிக்கு அனுப்பியவர் அவரே(யோவான் 8:42)
  • நம் பாவங்கள் மன்னிக்கப்பட தம்முடைய குமாரனை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தவர் அவரே (ரோமர் 8:32)
  • மரணத்தினின்று தம்முடைய குமாரனை உயிர்க்தெழுப்பியவரும் அவரே (அப் 2:34)
  • தம்முடைய குமாரனுக்கு சகல அதிகாரத்தையும் கொடுத்தவர் அவரே  (1கொரி 15 :27-28)
  • தம்முடைய குமாரனை நியாதிபதியாய் நியமித்தவர் அவரே (யோவான் 5:22)
  • இந்த உலகத்தின் முடிவு நாளை குறிப்பவரும் அவரே (மாற்கு 13:32)
  • அவரே நம்முடைய எல்லா ஜெபங்களுக்கும் பதிலளிக்கிறவர் (எபே 3:20)
  • இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் நமக்காக அவரிடத்தில்தான் வேண்டுதல் செய்கிறார்கள். (ரோமர் 8: 26,34 ;  1யோவான் 2:1)
  • நம்முடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியினால் முத்தரித்தவரும் அவரே (2கொரி 1:21-22)
  • நம்மை இயேசுவினிடத்தில் அழைத்து கொண்டுவந்தவர் அவரே (யோவான் 6:37,44,65)
  • தம்முடைய சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாய் எல்லாவற்றையும் செய்யத்தக்கவர் அவரே (எபே 1:12)
  • அவரே நம்முடைய பிதா அவரே நம்முடைய தேவன் (எபே 4:6)
  • அவரில்லாமல் ஒன்றுமில்லை அவரைத்தவிர வேறே தேவனும் இல்லை (ஏசா 43:10)

ஆகவே தான் அப்போஸ்தலர்கள் அனைத்து ஸ்தோத்திரங்களையும் இயேசுவின் மூலமாய் பிதாவாகிய தேவனுக்கு செலுத்துகிறார்கள்.

பேசியர் 3 : 20. நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

ஆக மேற்கண்ட வசனத்தின் மூலம் அனைத்து நன்மைகளும் பிதாவாகிய தேவனிடத்திலிருந்தே கிடைக்கிறது என்பதை அறிந்துதான் அப்போஸ்தலர்கள் இயேசுவின் மூலமாய் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தினார்கள். ஆனால் இன்றைக்கோ இயேசுதான் பிதா என்று சொல்லி இயேசுவே ஸ்தோத்திரம் என்று சொல்லுகிறார்கள். மேலும்

எபிரெயர் 13: 8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

மேற்கண்ட வசனத்தின்மூலம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விளங்குகிறது. ஆம் அவர் நேற்றும் இன்றும் என்றும் குமாரனாய் இருக்கிறார். ஆனால் திரித்துவ கொள்கையினரோ இயேசு நேற்று பிதாவாகவும் பின்பு குமாரனாகவும் இன்று பரிசுத்த ஆவியாகவும் மாறினார் என்று போதிக்கிறார்கள். அது தவறு, இயேசுவானவரோ அல்லது பிதாவாகிய தேவனோ என்றென்றைக்கும் மாறாதவர்கள் அவர்கள் மாறினார்கள் என்று போதிப்பது மிகவும் தவறானது.

மேலும் தேவனே தன்னைத்தவிர வேறே தேவன் இல்லை என்பதை கூறும் சத்தியத்தை கேளுங்கள்

உபாகமம் 4:39 ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,

உபாகமம் 32:39 நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

ஏசாயா 45:22 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

மேற்கண்ட வசனத்தில் தேவன் தன்னைப்பற்றி கூறும் வார்த்தையின் மூலம் அவரே தேவன் அவரைத்தவிர வேறே தேவன் இல்லையென்பதை தேவனே கூறுகின்றார். மேலும் இவர் கூறும்போது இயேசு என்னும் தேவன் அவர் மடியில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார் (யோவான் 1:18) என்பது தேவனுக்கு தெரியாமலா இருக்கும் நிச்சயம் அறிந்திருப்பார். ஆனாலும் இந்த வார்த்தைகளை கம்பீரத்தோடு கூறுகின்றார். காரணம் என்னவென்றால் அவர் மடியில் அமர்ந்திருக்கும் இயேசுவுக்கும் மேலான தேவன் இவரே என்பதினாலே.

ஏசாயா 43:10 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

இதிலே பிதா ஒருவரே தேவன் என்பதற்க்கு சாட்சிகளாய் வைக்கப்பட்ட தாசன் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம் அவர் இயேசுவே

ஏசாயா 42 :1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

மேற்கண்ட வசனங்கள் மூலம் அந்த தாசன் இயேசுவே என்பது புரிகிறதல்லவா ,

ஆகவே எனக்கு பிரியமானவர்களே பிதாவாகிய தேவன் ஒருவரே தேவன் என்பதற்க்கு தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள், இயேசு மற்றும் பிதா ஆகிய இத்தனை பேர் சொல்லியும் இயேசுவே தேவன் அவரைத்தவிர வேறே தேவன் இல்லை சொல்லி தேவனுக்கு எதிர்த்து நிற்காதிருங்கள். தேவன் ஒருவரே அவர் எல்லோருக்கும் தேவனாயிருக்கிறார் அவர் இயேசுவுக்கும் தேவனாயிருக்கிறார் என்பதை நாம் மனதில் கொள்வோம். ஆனால் திரித்துவ கொள்கையினரோ இயேசுதான் பிதாவாக இருந்தார் பின்பு குமாரனாக வந்தார் என்று சொல்லுகிறார்கள். அது தவறு,
அடுத்த பாடத்தில் நான் இயேசுவுக்கும் பிதாவுக்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்கும்போது நான் மேற்கூறிய எல்லா வசனங்களும் உங்களுக்கு தெளிவாய் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.




Church of Christ,

Comments

  1. Ayya next subject podringala waiting for that topic

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாடம் 1 திரித்துவம் என்பது என்ன?

பாடம் 2 இயேசுவை வேதம் தேவன் என்று ஏன் கூறுகிறது